×

பாஜ அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கை வெளியீடு 10 ஆண்டு மோடி ஆட்சி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது: காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் வெளியிட்ட கருப்பு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாஜவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,10 ஆண்டு அநியாய காலம் என்ற தலைப்பில், 54 பக்கங்கள் கொண்ட கருப்பு அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘10 ஆண்டு மோடி ஆட்சி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது. வேலையில்லா பிரச்னை அதிகமாக உள்ளது. விவசாய துறை அழிந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை துாண்டுதல், சிறுபான்மையினருக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளது. இன்று அரசுக்கு எதிராக ஒரு கருப்பு காகிதத்தை வெளியிடுகிறோம். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை முன்வைக்கும் போது,தனது தோல்விகளை மறைத்து வருகிறார். எனவே, கருப்பு அறிக்கையை வெளியிட்டு, அரசின் தோல்விகள் குறித்து பொதுமக்களிடம் கூற விரும்புகிறோம். இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிக பெரிய தவறான நடவடிக்கையாகும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் நாட்டின் பொருளாதாரம் இப்போதும் பாதித்து வருகிறது. விலைவாசி உயர்வு குறித்து கேட்டால், நேரு, இந்திரா காந்தியை பற்றி மோடி பேசுகிறார்.

இப்போது அவர்கள் ஆட்சி செய்கிறார்கள், அவர்கள் என்ன செய்தார்கள் என்று பதில் சொல்ல வேண்டும்.2 கோடி வேலைகளை வழங்குவது,விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவற்றை பற்றி மோடி முன்பு பேசினார். ஆனால்,அவரால் இப்போது அதை பேச முடியாது. அதற்கு பதிலாக அவர் புதிய உத்தரவாதம் பற்றி சொல்லி வருகிறார். இந்தியாவின் சுதந்திரத்தை காங்கிரஸ் உறுதி செய்தது. 2024ல் பாஜவின் அநீதியின் இருளில் இருந்து நாட்டை மீட்போம். நாட்டில் ஜனநாயகத்தை பாஜ குழி தோண்டி புதைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதற்கு பாஜ முயற்சித்து வருகிறது ’’ என்றார்.

* திருஷ்டி மை: மோடி கிண்டல்
காங்கிரஸ் வெளியிட்டுள்ள கருப்பு அறிக்கையை பற்றி மாநிலங்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி, ‘‘எப்பொழுதெல்லாம் நல்ல விஷயங்கள் நடக்கிறதோ, அப்பொழுது அவர்கள் திருஷ்டி படாமல் இருப்பதற்கு கருப்பு மை வைப்பது வழக்கம். நாடு புதிய உச்சங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் மீது திருஷ்டி படாமல் இருப்பதை தடுக்க இந்த கருப்பு மை உதவும். இதற்காக கார்கே ஜிக்கு நன்றி தெரிவிக்கிறேன். சில எம்பிக்கள் கூட கருப்பு அங்கிகளை அணிந்து பேஷன் ஷோவில் வருவது போல் நடந்து வந்தனர்‘‘ என கிண்டலாக குறிப்பிட்டார்.

The post பாஜ அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கை வெளியீடு 10 ஆண்டு மோடி ஆட்சி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது: காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Modi ,Congress ,Kharge ,New Delhi ,BJP government ,Dinakaran ,
× RELATED என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப்...